திருவிழாவுக்கு சிறப்பு பஸ் இல்லை கொழுமம் மக்கள் வேதனை

குமரலிங்கம், மே 9-

மடத்துக்குளம் தாலுகா கொழுமத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.

சுற்றுப்பகுதியை சேர்ந்த, 20க்கும் அதிகமான கிராம மக்கள் இத்திருவிழாவில் பங்கேற்பது வழக்கம்.

திருவிழாவையொட்டி இரவு நேரங்களிலும், பல்வேறு சிறப்பு பூஜைகள், பக்தி நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்தில் நடக்கிறது.

ஆண்டுதோறும், கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் போது, உடுமலையில் இருந்து கொழுமம் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

ஒரு வாரத்துக்கும் மேல் நடக்கும் திருவிழாவின் போது, இயக்கப்படும் சிறப்பு பஸ்களால்,நுாற்றுக்கணக்கான பக்தர்கள், கிராம மக்கள்பயன்பெற்று வந்தனர்.இந்தாண்டு திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள் போதியளவு இயக்கப்படவில்லை.

உடுமலை-கொழுமம் வழித்தடத்தில் குறைந்தளவு பஸ்களே இயக்கப்படுவதால், பக்தர்கள் கூட்ட நெரிசலில் திணறியபடி பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சிலர் குமரலிங்கம் வரை இயக்கப்பட்ட பஸ்களில் சென்று அங்கிருந்து கோவிலுக்கு நடந்தே சென்றனர்.

பக்தர்கள் எண்ணிக்கை அடிப்படையில், திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால், கொழுமம் பகுதி மக்கள் வேதனையடைந்துள்ளனர்.

Advertisement