'கர்நாடக சங்கீதத்தின் இன்னொரு வடிவம்தான் பரதநாட்டியம்'

கோவை: கோவை மாருதி கான சபா சார்பில், மிருதங்க கலைஞர் நெல்லை கண்ணனுக்கு பாராட்டு விழா, வடகோவையில் உள்ள மாருதி கான சபாவில், நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு, மூத்த மிருதங்க கலைஞர் திருவாரூர் பக்தவத்சலம் தலைமை வகித்தார். சங்கர் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் மோகன்சங்கர் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பரதநாட்டிய கலைஞர் டாக்டர் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பேசியதாவது:

பரதநாட்டியத்துக்கு மிருதங்கம் வாசிப்பது ஒரு தனிக்கலை. இதில் நெல்லை கண்ணனின் வாசிப்பு, மிக கச்சிதமாக இருக்கும். சதிகளின் வல்லினம், மெல்லினம் உச்சரிப்புக்கு ஏற்ப ரசித்து வாசிப்பார்.

பரதநாட்டியத்தை, 'விஷூவல் மியூசிக்' என்று சொல்வார்கள். கர்நாடக சங்கீதத்தின் இன்னொரு வடிவம்தான் பரதநாட்டியம். கர்நாடக சங்கீதத்தை ரசித்து, அதன் சாரத்தை பரத நாட்டியத்தில் வழங்க வேண்டும். இதை மிருதங்க வாசிப்பில், உணர்த்தக்கூடிய இசைக்கலைஞர் நெல்லை கண்ணன். இசையும், நாட்டியமும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்பதை, நிருபிக்கும் இசைக்கலைஞராக நெல்லை கண்ணன் விளங்குகிறார்.

மாருதி கான சபா நிர்வாகிகள் விஸ்வநாதன், முருகன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Advertisement