இந்திய ராணுவத்துக்கு ஆதரவு சென்னையில் ஒற்றுமை பேரணி முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
சென்னை:இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஒற்றுமை பேரணி நடந்தது.
மெரினா கடற்கரையில் உள்ள டி.ஜி.பி., அலுவலத்தில் துவங்கிய பேரணி, தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம் வரை நடந்தது.
பேரணியில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், காவல் துறையினர், என்.சி.சி., மாணவர்கள் என, 10,000க்கும் மேற்பட்டோர், கைகளில் தேசியக்கொடி ஏந்தியவாறு பங்கேற்றனர்.
காமராஜர் சாலை மற்றும் நேப்பியார் பாலம் வழியாக, ஒரு மணி நேரம் நடந்த பேரணி, போர் நினைவுச் சின்னம் அருகே நிறைவு பெற்றது.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, இந்தியா - பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முரளி நாயக் உருவப்படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
டி.ஜி.பி., அலுவலகம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை, 200 நிழற்கூடங்கள்; 50 கழிப்பறைகள்; 10 மருத்துவ முகாம்கள்; 71 குடிநீர் தொட்டிகள்; 15 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
இதில் பங்கேற்ற பின், துணை முதல்வர் உதயநிதி கூறுகையில், ''தேசப்பற்றில் முதன்மையான மாநிலமாக தமிழகம் உள்ளது. மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக முதல்வர் ஸ்டாலின், நம் ராணுவத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், இந்த ஒற்றுமை பேரணியை நடத்தி உள்ளார். இது, நம் ராணுவத்திற்கு நாம் செய்யும் நன்றி,'' என்றார்.
தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறுகையில், ''ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு நம்பிக்கை தருவதோடு, அவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் என்றும் இருப்போம் என்பதை குறிக்கும் வகையில் இந்த பேரணி நடந்தது. நம்மை காக்க உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு, நாம் உறுதுணையாக இருப்போம்,'' என்றார்.
பேரணியில், அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, சுப்பிரமணியன், மகேஷ், செழியன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, வி.சி., தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராணுவத்துக்கு ஆதரவாக, சென்னையில் மக்கள் பேரணி நடத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு, கவர்னர் ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவு: பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக, நாட்டை துணிச்சலுடனும், வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன், எட்டு கோடி தமிழக மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், பிரமாண்டமான மக்கள் பேரணியை, முதல்வர் ஸ்டாலின் நடத்தியுள்ளார். இதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.
நம் ஆயுதப் படைகளுடன், இந்திய தேசம் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் துணை நிற்கிறது. இது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து, நம் தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நம் ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.