கடல் வாழ் உயிரினங்களின் படைப்புகள் ரோஜா கண்காட்சியில் பார்வைக்கு விருந்து

ஊட்டி:ரோஜா கண்காட்சியில் கடல் வாழ் உயிரினங்கள் குறித்த படைப்புகள் சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்தது.

-நீலகிரி மாவட்டம் ஊட்டி ரோஜா பூங்காவில், 20வது ரோஜா கண்காட்சி நேற்று துவங்கியது. அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் கண்காட்சியை துவக்கி வைத்தார்.

கண்காட்சியின் சிறப்பு அம்சமாக இரண்டு லட்சம் ரோஜா மலர்களை கொண்டு, வடிவமைக்கப்பட்ட டால்பின், பென்குயின், முத்து சிப்பி, கடல் குதிரை, நீல திமிங்கலம், மீன், கடல் கன்னி, நட்சத்திர மீன் மற்றும் அழிந்து வரும் கடல் உயிரினமான கடல் பசு போன்றவை சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்தது.

நுழைவாயிலில் நீர்வாழ் உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு வாசகம் இடம் பெற்றது. சுற்றுலா பயணியர் போட்டோ, 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட, மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலை துறையினரால் பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு, இசைக்கருவி, மீன் போன்ற வடிவங்கள் உருவாக்கப்பட்டு இருந்தது. கண்காட்சியில் தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. நிகழ்ச்சியில், ரோஜா செடி வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா , தோட்டக்கலை இயக்குனர் குமாரவேல் பாண்டியன், தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி, நீலகிரி எஸ்.பி. நிஷா உட்பட பலர் பங்கேற்றனர்.

மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சியை சுற்றுலாப் பயணியர் கண்டுக்களிக்கும் வகையில், தோட்டக்கலை துறை சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement