காஞ்சியில் சாலையோர மரங்களில் ஆணியை அகற்றிய தன்னார்வலர்கள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரின் பிரதான சாலையோரங்களில் நிழல் தரும் வகையில் உள்ள மரங்களில், தனியார் வணிகம், கல்வி நிறுவனத்தினர் விளம்பரத்திற்காக ஆணி அடித்து விளம்பர பலகை அமைத்துள்ளனர்.
இதனால், நாளடைவில் மரங்கள் பட்டுபோகும் நிலை உள்ளது. எனவே, சாலையோரத்தில் மரங்களில் ஆணியால் அடித்து வைக்கப்பட்டுள்ள விளம்ப பதாகைகளை அகற்றும் வகையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பசுமை இந்தியா என்ற தன்னார்வ அமைப்பு முடிவு செய்ததது.
அதன்படி,, காஞ்சி அன்ன சத்திரம், சர்வம், காஞ்சி சிறகுகள், வடலி, மகிழம், வீரமணிகண்டன் அய்யப்பா குழு, அறம் செய்ய விரும்பு உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்பினர் ஒன்றிணைந்து, சாலையோர மரங்களில் விளம்பர பலகை அமைக்க அடிக்கப்பட்டிருந்த ஆணியை நேற்று அகற்றினர். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் துவங்கிய இந்நிகழ்வை, காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலர் ரவி மீனா துவக்கி வைத்தார்.
துவக்க நாளான நேற்று, வந்தவாசி சாலையில் உள்ள 25 மரங்களில் இருந்த 200க்கும் மேற்பட்ட ஆணியை அகற்றினர். மரங்களில் ஆணி இருந்த இடத்தில் மஞ்சள் பேஸ்ட் மற்றும் பசுஞ்சாணம் பூசப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் நினைவாக கூட்டுறவு வளாகத்தில் மகிழம் மரக்கன்று நடவு செய்யப்பட்டது என, பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பசுமை மேகநாதன், காஞ்சி அன்னசத்திரம் மோகன் தெரிவித்தனர்.