பாகிஸ்தானை ஆதரித்த துருக்கி, அஜர்பைஜானை புறக்கணிக்க வேண்டும்; இணையத்தில் டிரெண்டிங்

5


புதுடில்லி: பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும்; அந்நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி, இணையத்தில் நெட்டிசன்கள் டிரண்டிங் செய்து வருகின்றனர்.


பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாக்.,கில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனைதொடர்ந்து பதிலடி கொடுக்கப்போவதாக கூறி பாகிஸ்தான் டுரோன்களை ஏவி தாக்கியது. இதனை இந்தியா முறியடித்தது.


இதில், துருக்கி பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. கடந்த 2023ம் ஆண்டு துருக்கி கடுமையான பூகம்பத்தால் பாதிக்கப்பட்டது. அப்போது, களமிறங்கிய இந்தியா, அந்நாட்டிற்கு உதவி செய்ததுடன், மீட்பு பணியிலும் ஈடுபட்டது. ஆனால், அந்த உதவியை சிறிதும் நினைத்துப் பார்க்காத துருக்கி, காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் பாகிஸ்தானையே ஆதரிப்பதுடன், அந்நாட்டிற்கு தேவையான ஆயுதங்களை வழங்கி வருகிறது. இந்தியா மீது பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன்கள் துருக்கி வழங்கியிருந்ததை ராணுவத்தினர் உறுதி செய்தனர். அதேபோல், அஜர்பைஜான் நாடும் பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது.


இது குறித்த தகவல் வெளியானதும் இந்தியர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏராளமானோர், மேற்கண்ட இரு நாடுகளுக்கும் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என சமூக வலைதளத்தில் ஏராளமானோர் கருத்து பதிவிட அது வைரலாக துவங்கியது. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து துருக்கிக்கு 287,000 பேர் சுற்றுலா சென்றனர். அதேபோல் அஜர் பைஜான் நாட்டிற்கும் 2,43,000 பேர் சுற்றுலா சென்றனர்.

தற்போது, இந்தியர்கள் கோபம் காரணமாக இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோதாது என்று சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும் சில நிறுவனங்களும் அந்நாட்டிற்கு சுற்றுலா ஏற்பாடு செய்வதை ரத்து செய்யப்போவதாக அறிவித்து உள்ளன.இது துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாட்டு சுற்றுலா துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதன் காரணமாக தங்களது சுற்றுலா பாதிக்கப்படும் என அஞ்சிய துருக்கி சுற்றுலாத்துறை இந்தியர்களை சமாதானபடுத்த வேண்டும் என்பதற்காக ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், துருக்கி வருபவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். சிறப்பாக வழிநடத்துவோம். தற்போதைய சூழ்நிலையில் துருக்கிக்கான சுற்றுலாவை ஒத்திவைப்பதற்கோ அல்லது ரத்து செய்வதற்கோ எந்த காரணமும் இல்லை. எனக்கூறியுள்ளது.

வர்த்தகம் பாதிப்பு



பாகிஸ்தானுக்கு வெளியிட்ட ஆதரவை தொடர்ந்து துருக்கியில் இருந்து ஆப்பிள் இறக்குமதியை நிறத்தப் போவதாக புனே வர்த்தக சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக சுயோக் ஜென்டே கூறியதாவது: பாகிஸ்தான் ஆதரவு தெரிவிப்பதால், துருக்கியில் இருந்து ஆப்பிள் இறக்குமதியை நிறுத்த முடிவு செய்துள்ளோம். அதற்கு பதில், ஹிமாச்சல் உள்ளிட்ட இடங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்கும்போது, பாகிஸ்தானுக்கு துருக்கி ஆயுதங்களை வழங்குகிறது. நுகர்வோர்களும், தங்களுக்கு துருக்கி ஆப்பிள் தேவையில்லை என்கின்றனர். இதனால், துருக்கி ஆப்பிளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். 3 மாதங்களாக துருக்கி ஆப்பிள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வணிகத்தின் மதிப்பு ரூ. 1,200- 1,500 கோடி வரை இருக்கும். துருக்கியில் பூகம்பம் ஏற்பட்ட போது முதல் நபராக இந்தியா உதவியது. ஆனால், அந்நாடு பாகிஸ்தானை ஆதரிக்கிறது என்றார்.

துருக்கியுடன் இந்தியா ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் செய்கிறது.



அதேபோல், அஜர் பைஜான் நாட்டுடன் ரூ.15,500 கோடி அளவுக்கு வர்த்தகம்நடக்கிறது.



(இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் அஜர்பைஜான் மூன்றாம் இடம்)


கடந்த ஓரிரு ஆண்டுகளில் துருக்கி, அஜர்பைஜானுடன் இந்திய ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்தது. இந்நிலையில், இருநாடுகளுடன் வர்த்தக உறவு பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement