மீண்டும் புதிய கொரோனா அலையா; சிங்கப்பூர், ஹாங்காங்கில் தொற்று அதிகரிப்பு

சிங்கப்பூர்; சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தி உள்ளது.


@1brகடந்த 2019ம் ஆண்டில் உலக நாடுகளை ஆட்டுவித்த கொரோனா வைரஸ் தொற்றை யாரும் மறந்துவிட முடியாது. அதன் பாதிப்புகள், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏராளம்.


உலகின் பெரும்பாலான நாடுகள் மறந்துவிட்ட கொரோனா தொற்று தற்போது சிங்கப்பூர், ஹாங்காங்கில் அதிவேகமாக பரவி வருகிறது. அண்மைக்காலமாக பதிவாகி வரும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இதை உறுதி செய்கிறது.


ஹாங்காங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளது என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனர். அங்கு தற்போதுள்ள கொரோனா தொற்று சதவீதம் 11.4 ஆகும். இதுவே கடந்த மார்ச்சில் 1.7 சதவீதமாக இருந்தது.


பரிசோதனை மாதிரிகளில் பெரும்பாலானவற்றில் தொற்றுகள் உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. ஹாங்காங்கின் நிலைமை இப்படி இருக்க சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 28 சதவீதம் கொரோனா தொற்றுகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மே 3ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், 14,200 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை கூறி உள்ளது. இதேபோல தாய்லாந்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.


ஹாங்காங் நாட்டின் பிரபல பாடகர் ஈசன் சான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால்,தைவான் நாட்டில் உள்ள காவ்சுயிங் என்ற இடத்தில் நடப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த அவரின் இசைநிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.


இந்த கொரோனா வைரஸ் தொற்றால் கடும் பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கான அறிகுறிகள் இல்லை என்று சிங்கப்பூர் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement