தேச உணர்வு இல்லாதவர்கள், இதைச் செய்யுங்கள்... நயினார் நாகேந்திரன் ஆவேசம்

5

திருப்பூர்: தேச உணர்வு இல்லாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.



ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியை கொண்டாடும் வகையில் பா.ஜ., சார்பில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இன்று மூவர்ண யாத்திரை நடைபெற்றது. திருப்பூரில் நடைபெற்ற யாத்திரையில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


யாத்திரையை தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்தது விபத்து அல்ல. அது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி.


ஒரு தீவிரவாதியின் செயலால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் நாம் பழி சொல்ல முடியாது. ஒன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த சமூகத்தில் இந்து, இஸ்லாமியர்கள் இடையே மிக பெரிய பூகம்பத்தை உருவாக்கிவிட்டு பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கம் போய் இருக்கிறது.


பிரதமர் மோடி 12 நாட்கள் விரதம் இருப்பது போல் இருந்து, எப்படி பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும், ஆபரேஷனில் பாகிஸ்தானில் உள்ள ஒரு பொதுமக்கள் கூட பாதிக்கப்படக்கூடாது என்ற உணர்வோடு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயர் வைத்தார்.


எந்த ஒரு பெண்ணுக்கு நெற்றியில் செந்தூரம் இல்லையோ, 2 பெண்களை அனுப்பி பாகிஸ்தானை நிலைகுலைய வைத்தவர் பிரதமர் மோடி. சாதாரண விஷயமா அது? கார்கில் போரில் வாலாட்டிய போது அன்றைக்கும் வாஜ்பாய் பதிலடி கொடுத்தார்கள்,


பிரதமர் மோடியை பொறுத்த வரை அன்புக்கு அன்பு, ரத்தத்திற்கு ரத்தம், பழிக்குப்பழி வாங்கியே தீரவேண்டும் என்பதற்காக நம்முடைய தேசத்தை இழந்துவிட முடியுமா? அதற்காக தான் 100 கிமீ. தாண்டி பாகிஸ்தானின் லாகூரிலும், ராவல்பிண்டியிலும் விமான தளத்தை எல்லாம் நொறுக்கினார்கள்.


பயங்கரவாதத்தையும், அதை யாரெல்லாம் ஆதரிக்கிறார்களோ அத்தனை பேரையும் அடித்து நொறுக்குவேன் என்பதற்காக தான், பிரதமர் நாடு நாடாக சென்றார்கள்.


நமது நாட்டில் தேசபக்தி இருக்கிறதா என்று சொன்னால் எல்லோருக்கும் இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எக்ஸ் வலைதளத்தில் போடுகிறார்கள், இதை(பஹல்காம் தாக்குதல்) உளவுத்துறை சரியாக கண்காணிக்கவில்லை. பாகிஸ்தானை எடுத்துவிட்டால் (மேப்பில் இருந்து) அங்குள்ள பொதுமக்கள் பாதிப்பார்களே?


பாகிஸ்தானில் இருந்து வர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. திடீரென யாராவது வந்தால் என்ன செய்வது? ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதை போல இவர்கள் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்றால் தமிழன் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது.


தேச உணர்வோடு இருங்கள், இல்லையென்றால் எல்லோரும் பாகிஸ்தானுக்கு போய்விடுங்கள். அவ்வளவுதான், வேற ஒண்ணும் இல்லை. பாகிஸ்தானை பற்றி தெரியுமா உங்களுக்கு? ஆந்திராவில் காங்கிரஸ் முதல்வர் பாகிஸ்தானை அழித்தே ஆக வேண்டும் என்கிறார். ஆனால் இங்குள்ள முதல்வர் என்ன சொல்றார்? எந்த விதமான பதிலும் இல்லை.


ஒருநாள் ஊர்வலம் நடத்திவிட்டால் போதுமா? பாகிஸ்தானுக்கு ஆதரவாக ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களை தான் நான் சொல்கிறேன், ஒட்டுமொத்தமாக எல்லோரையும் அல்ல. உலக வரைப்படத்தில் இருந்து பாகிஸ்தானை எடுத்துவிடுவேன் என்று பிரதமர் சொன்னார், அதை இப்போது செய்யப்போகிறார்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.


முன்னதாக தமிழக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், பக்கத்து நாட்டை நாம் சகோதரர்களாக பார்த்துக் கொண்டு இருந்தாலும் கூட, 1947ல் இருந்து பிரச்னை மேல் பிரச்னை செய்து கொண்டு இருக்கிறார்கள். நம் மக்களை படுகொலை செய்கின்றனர், காஷ்மீரில் பயங்கரவாதத்தை வளர்க்கின்றனர்.


எத்தனை முறை நாம் அவர்களுக்கு புத்தி கற்பித்தாலும் கூட, அவர்களுக்கு தெரியவில்லை. நம்முடைய தாக்குதல் என்பது பாகிஸ்தானில் உள்ள அப்பாவிகள் மேல் கிடையாது.


போர் நிறுத்தம் என்பது தற்காலிக நிறுத்தம் மட்டும்தான். இன்றில் இருந்து இந்தியாவின் மீது பாகிஸ்தான் நடத்தும் ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலையும் நம் நாடு அதை போராக பார்க்க போகிறது.


இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Advertisement