ஜம்மு காஷ்மீரில் எஸ்.ஐ.ஏ., அதிகாரிகள் ரெய்டு; ஸ்லீப்பர் செல்களை ஒழிக்க நடவடிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஷோபோர், பாரமுல்லா உள்பட பல பகுதிகளில் எஸ்.ஐ.ஏ., அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானுடனான மோதலுக்குப் பிறகு இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒடுக்கும் பணிகளில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக சிறப்பு ஆபரேஷன்கள் மூலம் பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். அதேபோல, பஞ்சாப், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்ப்பவர்களையும் போலீசார் தட்டி தூக்கி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. எனவே, கண்காணிப்பு பணிகளையும், பாதுகாப்பையும் இந்திய ராணுவம் பலப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் போலீசின் ஒரு பிரிவான எஸ்.ஐ.ஏ., பல்வேறு இடங்களில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
வடக்கு காஷ்மீரின் ஷோபோர், பாரமுல்லா, ஹந்த்வாரா, கந்தேர்பல் மற்றும் ஸ்ரீநகர் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனையானது நடந்து வருகிறது. இந்திய ராணுவம் குறித்த ரகசியங்களை பயங்கரவாதிகளிடம் தெரிவிக்கும் ஸ்லீப்பர் செல்கள் பதுங்கியிருக்கிறார்களா? என்று தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
ஏற்கனவே, கடந்த சில தினங்களுக்கு முன்பு தெற்கு காஷ்மீரில், உபா பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் எஸ்.ஐ.ஏ., சோதனை நடத்தியிருந்தது. இந்த சோதனையில், பல தகவல்கள் கிடைத்ததாகவும், அதன்பேரில் விசாரணை விரிவடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து எஸ்.ஐ.ஏ., வெளியிட்ட அறிக்கையில், "காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகளை ஜம்மு காஷ்மீர் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இங்குள்ள ஸ்லீப்பர் செல்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு படைகள் தொடர்பான ரகசியங்களை பகிர்ந்து வருவதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஜம்மு காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், தற்போது எஸ்.ஐ.ஏ., அதிகாரிகளின் இந்த ரெய்டு, பயங்கரவாதிகளுக்கு துணைபோகுபவர்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்தியுள்ளது.