துருக்கிக்கு ஒரு நெருக்கடி: பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்த மும்பை ஐ.ஐ.டி.

2

மும்பை; பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்துள்ளதால் துருக்கி பல்கலைக் கழகத்துடன் மேற்கொண்டு இருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மும்பை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் ரத்து செய்துள்ளது.



பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் அதிரடி காட்டிய மத்திய அரசு, அடுத்த கட்டமாக பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்களை உலக நாடுகள் கவனத்துக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.


அதன் முக்கிய கட்டமாக, பல்வேறு நாடுகளுக்கும் நேரில் சென்று விவரிக்க ஏதுவாக, அனைத்துக் கட்சிகளின் எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.


இந் நிலையில் மத்திய அரசு ராஜாங்க ரீதியாக நடவடிக்கைகளை செயல்படுத்தி வரும் சூழலில், நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களும் பாகிஸ்தான் மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கூர் தீட்டி உள்ளது. மும்பை ஐ.ஐ.டி., பல்கலைக்கழகமானது துருக்கியுடன் மேற்கொண்டு இருந்த அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.


இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மும்பை ஐ.ஐ.டி., நிர்வாகம் சமுக வலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;


தற்போது நிலவி வரும் அரசியல் காரணமாக துருக்கி நாட்டு பல்கலைக் கழகங்களுடன் மேற்கொண்டுள்ள அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று கூறி உள்ளது.


முன்னதாக டில்லி ஐவஹர்லால் பல்கலை., ஐ.ஐ.டி., ரூர்கே, சண்டிகர் பல்கலை., ஆகிய கல்வி நிலையங்கள் துருக்கி பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

Advertisement