இந்த மூன்று விஷயத்தை செய்தால் போர் நிறுத்தம்: ஹமாஸ்க்கு இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

ஜெருசலேம்: மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில், ஹமாஸ் உடன் தொடர்ந்து நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 2023ல் துவங்கிய போர் இன்னும் நீடித்து வருகிறது.
காசா முனையின், டெய்ர் அல்-பலா மற்றும் கான் யூனிஸ் நகரங்களின் புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
மருத்துவமனை மூடல்
குறிப்பாக, வடக்கு காசாவில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.வடக்கு காசாவில் உள்ள இந்தோனேஷியன் மருத்துவமனை இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவ கட்டுபாட்டுக்குள் வந்துள்ளதால், இந்த மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மூன்று நிபந்தனைகள்
இந்நிலையில், மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில், ஹமாஸ் உடன் தொடர்ந்து நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளதாவது:
அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். காசாவில் இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகளை நாடு கடத்த வேண்டும். காசா பகுதியை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இந்த மூன்று விஷயங்களை செய்தால் போர் நிறுத்தம் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன். இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
கத்தார் தலைநகர் தோஹாவில் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

