இந்தியாவால் தேடப்பட்ட பயங்கரவாதி பாக்.,கில் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்: ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலக குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட பயங்கரவாதி ரசவுல்லா, பாகிஸ்தானில் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாக்.,கின் சிந்து மாகாணத்தில் உள்ள மாட்லி பகுதியை சேர்ந்தவர், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி ரசவுல்லா நிஜாமனி காலித் என்ற அபு சைபுல்லா காலித்.
நம் நாட்டில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் 2006ல் நடந்த குண்டு வெடிப்பு, பெங்களூரு ஐ.ஐ.டி.,யில் 2005ல் நடந்த தாக்குதல், உ.பி.,யின் ராம்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் முகாமில் 2008ல் நடந்த தாக்குதல் என ஏராளமான பயங்கரவாத செயல்களில் தொடர்பு உடையவர்.
இவரை தலைமறைவு பயங்கரவாதியாக அறிவித்து, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் தேடி வந்த நிலையில், பாக்.,கில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தார். நேற்று பிற்பகலில், சிந்து மாகாணத்தின் மாட்லியில் உள்ள வீட்டில் இருந்து வெளியே சென்ற போது, பாட்னி என்ற இடத்தில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் மூவர், சரமாரியாக சுட்டனர்.
அதில், பயங்கரவாதி காலித் படுகாயமடைந்தார். மருத்துவமனைக்கு காலித்தை கொண்டு சென்றபோது, ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
வினோத் குமார், முகமது சலீம், ரசவுல்லா என வெவ்வேறு பெயர்களில் சுற்றித் திரிந்த காலித், நேபாளத்திலும் 2000ல் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத இயக்கத்தை துவக்கி, இந்திய -- நேபாள எல்லையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டார்.
பின்னர் பாக்., சென்று சிந்து மாகாணத்தில் உள்ள பதின், ஹைதராபாத் ஆகிய மாவட்டங்களில் லஷ்கர் - இ - தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவது, ஆள் சேர்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
லஷ்கர் - இ - தொய்பா தலைமையில் உள்ள முக்கிய பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய ரசவுல்லா, தனிப்பட்ட காரணங்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.