பிளஸ் 2 மாணவிக்கு தொந்தரவு பா.ஜ., நிர்வாகி மீது போக்சோ

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலகண்டன் 55, மீது உயர்நீதிமன்ற உத்தரவின்படி மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தற்போது அப்பகுதி கல்லூரி பயின்று வருகிறார். 2022ல் அவர் பிளஸ் 2 பயின்றார்.

அவர்களது வீட்டை மீட்க அவரது தாயார் சுரண்டை அருகே சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்த நீலகண்டனிடம் வட்டிக்கு கடன் வாங்கினார்.

நீலகண்டன் தனியார் பஸ் கம்பெனி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்கிறார்.

2023 பிப்.,9 மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது நீலகண்டன் ஆதரவாக பேசுவது போல பேசி முதுகில் தட்டி கொடுத்து பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றார்.

மாணவி அவரிடம் இருந்து தப்பினார்.

ஆனால் இதை வெளியில் சொல்லக் கூடாது என நீலகண்டன் துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.

அதன் பிறகு அலைபேசி வீடியோவில் ஆபாச படங்களை காட்டி பாலியல் அவதூறு செய்தார்.

இதுகுறித்து 2023 டிச., 27 ஆலங்குளம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் மாணவி புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. மாணவி தரப்பில் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை ஏப்.,24ல் போலீசார் விசாரித்து வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் பிறகும் போலீசார் வழக்கு பதியாமல் தாமதப்படுத்தினர்.

இதுகுறித்து டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹதிமனியிடம் மாணவி புகார் செய்தார்.

டி.ஐ.ஜி., உத்தரவின்படி நீலகண்டன் மீது அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement