அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்; இன்று இளம் ஜோடி சுட்டுக் கொலை; இஸ்ரேல் தூதரக ஊழியர்களுக்கு நேர்ந்த துயரம்!

13

வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்று(மே 22) இரண்டு இஸ்ரேல் தூதரக ஊழியர்கள்
சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் நிச்சயதார்த்தம் செய்யவிருந்த ஒரு இளம் ஜோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.


அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தில், பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இஸ்ரேல் தூதரகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். "பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த வாரம் ஜெருசலேமில் நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது" என அமெரிக்காவிற்கான இஸ்ரேல் தூதர் யெச்சியல் லெய்டர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் கூறியிருப்பதாவது: யாரோன் மற்றும் சாரா இரண்டு பேருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. வாஷிங்டனில் ஒரு பயங்கரவாதி அவர்களை சுட்டுக் கொன்றான். அவர்களின் கொலையால் முழு தூதரக ஊழியர்களும் மனம் உடைந்து பேரழிவிற்கு ஆளாகியுள்ளனர்.


இந்த பேரழிவு இழப்பில் எங்களது வருத்தத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. எங்கள் இதயங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. இந்த துயரமான நேரத்தில் தூதரகம் அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சிகாகோவைச் சேர்ந்த 30 வயதான எலியாஸ் ரோட்ரிக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

Advertisement