விழுப்புரத்தில் துாய்மை இயக்க கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்பில் துாய்மை இயக்கம் மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் நடந்தது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி பேசுகையில், 'துாய்மை இயக்கம் சார்பில் மாவட்டத்தில் உள்ள கிராமம், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மக்கும், மக்கா குப்பைகளை கண்டறிந்து மறு சூழற்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் தவிர்க்கும் விதமாக துறை சார்ந்த அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். அதேபோல் மறு சுழற்சி செய்யும் குப்பைகளை சிமென்ட் தொழிற்சாலைகளுக்கும் மறு சுழற்சி செய்ய முடியாத கழிவுகளை அகற்றவும் நடடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள இ கழிவுகளை கண்டறிந்து அகற்ற வேண்டும். நகர்ப்புற பகுதிகளில் கட்டட கழிவுகள் நீர்நிலைகளில் கொட்டுவதை தவிர்த்து, அதற்கான பகுதிகளில் கழிவுகளை கொட்ட மக்களிடம் அறிவுறுத்த வேண்டும். நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றப்பட வேண்டும்.

நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளை தரம் பிரித்து பாதுகாப்பான முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுசூழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கு பிளாஸ்டிக் தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களுக்கு மீண்டும் மஞ்சள் பை பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பத்மஜா, உதவி திட்ட அலுவலர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement