ஒரங்காவலி ஏரி பாசன கால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த காட்டுதேவாத்துார் ஊராட்சியில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட ஒரங்காவலி கிராமத்தில் 155 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியும், 57 ஏக்கர் பரப்பளவு கொண்ட சித்தேரியும் உள்ளது.
இந்த ஏரியின் மூலமாக 400க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு வயல்வெளி நீர்ப்பாசனம் பெறுகிறது,விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாகும்.
நெல், மணிலா, தர்பூசணி போன்றவை பருவத்திற்கு ஏற்றதுபோல பயிரிடப்படுகிறது.
ஏரியில் இருந்து வயல்களுக்கு செல்லும் பாசனக்கால்வாய்கள் பராமரிப்பு இன்றி புதர்மண்டி உள்ளது. இதனால் கடைமடை பகுதியில் உள்ள வயல்களுக்கு தண்ணீர் செல்லாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, ஒரங்காவலி ஏரி நீர்ப்பாசனக் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.