அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 5 வயது குழந்தைகளை சேர்த்து பயன்பெற அழைப்பு
நாமக்கல் :'நாமக்கல் மாவட்ட அங்கன்வாடி மையங்களில், 2 முதல், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சேர்க்கை நடக்கிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை இந்த மையங்களில் சேர்த்து பயன்பெறலாம்' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் மூலம், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், நம் மாவட்டத்தில் செயல்படும், 1,599 அங்கன்வாடி மையங்களில், சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவ கல்வி போன்றவை வழங்கப்படுகிறது. குறிப்பாக, 2 முதல், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, அங்கன்வாடி மையத்தில் முறைசாரா முன்பருவ கல்வி, செய்கை பாடல், கதை, விளையாட்டு கல்வி, உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்
படுகிறது.
இத்திட்டத்தில், குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையானவற்றை, 'ஆடிப்பாடி விளையாடு பாப்பா' எனும் சிறப்பு பாடத்திட்ட திருப்புதலுடன், 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்கள், தற்போது வீடுதோறும் குழந்தைகள் சேர்க்கை பணி மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்றோர், தங்களது, இரண்டு முதல், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை, ஜூனில் குழந்தைகள் மையத்தில் தவறாது சேர்க்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அந்த சேவையையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.