தங்கையிடம் அத்துமீறியவருக்கு 16 வயது அண்ணன் கத்திக்குத்து

நாமக்கல்:நாமக்கல் அருகே தங்கையிடம் அத்துமீறியவரை கத்தியால் குத்திய 16 வயது சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், வீரியப்பம்பாளையம் காலனியை சேர்ந்தவர் ஜெகநாதன், 45; குடிநீர் டேங்க் ஆப்பரேட்டர். திருமணமாகி, மனைவி, மகன், மகள் உள்ளனர். கருத்து வேறுபாடால் நான்காண்டுகளுக்கு முன் மனைவி பிரிந்து சென்றார். தாயுடன் ஜெகநாதன் வசிக்கிறார்.

இந்நிலையில், வீரியப்பம்பாளையம் காலனி பகுதியில், ஒரு சிறுமியிடம் ஜெகநாதன் தவறாக நடந்துள்ளார்.

இது குறித்து தன் 16 வயது அண்ணனிடம் சிறுமி கூறியுள்ளார். ஆத்திரமடைந்த சிறுவன், நேற்று முன்தினம் இரவு, அப்பகுதி அங்கன்வாடி மையம் அருகே நின்றிருந்த ஜெகநாதனை, கத்தியால் சரமாரியாக குத்தி தலைமறைவானார்.

வழக்கு பதிந்த நாமக்கல் போலீசார், அதே பகுதியில் பதுங்கியிருந்த சிறுவனை நேற்று கைது செய்து, சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Advertisement