சென்னைக்கு ஆறுதல் வெற்றி; 10வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தது

ஆமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
ஆமதாபாத்தில் இன்று நடந்த 67வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும் சென்னை அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்தத் தொடரில் சென்னை அணிக்கு இது கடைசி போட்டியாகும்.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஆயுஷ் மாத்ரே, கான்வே தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதிரடியாக ஆடிய மாத்ரே 17 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். தொடர்ந்து வந்த உர்வில் படேல் 37 ரன்களும், துபே 17 ரன்களும் குவித்து அவுட்டாகினர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கான்வே, 35 பந்துகளில் 52 ரன்களும் குவித்து அவுட்டானார்.
இறுதியில் பிரேவிஸ் அதிரடியாக விளையாடினார். குஜராத் அணியின் பந்துவீச்சை சிக்சரும், பவுண்டரியுமாக பறக்க விட்டார். 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனால், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் சேர்த்தது.
அதிரடியாக ஆடிய பிரேவிஸ் 23 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். ஜடேஜா 21 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
தொடர்ந்து, பேட் செய்த குஜராத் அணி, சென்னையின் பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது. கில் (13), பட்லர் (5) ரூதர்போர்டு (0), ஷாருக்கான் (19) ஆகியோர் அவுட்டாகினர். மறுமுனையில் பொறுப்பாக விளையாடிய சாய் சுதர்சனும் 41 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பிறகு வந்த வீரர்களும் சீரான இடைவேளையில் விக்கெட்டுக்களை இழந்தனர். இறுதியில், சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சால், குஜராத் அணி 18.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதன்மூலம், 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
சென்னை அணி தரப்பில் அன்சுல் கம்போஜ், நூர் அகமது தலா 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும், கலீல் அகமது, பதிரானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
நடப்பு பிரீமியர் லீக் தொடரில் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துடன் தொடரை நிறைவு செய்துள்ளது. பிரீமியர் லீக் வரலாற்றில் முதல்முறையாக 10வது இடத்துடன் வெளியேறியுள்ளது. ஒருவேளை, குஜராத் அணியை 121 ரன்னுக்குள் சுருட்டியிருந்தால், சென்னை அணி 9வது இடத்தை பிடித்திருக்கும்.
4வது வீரர்
சென்னைக்காக அதிவேக அரைசதம் அடித்த வீரர்களில் பிரேவிஸ் 4வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் ரெய்னா (16 பந்துகள்) உள்ளார். இதற்கு அடுத்த இடங்களில் மொயின் அலி, ரஹானே (19 பந்துகள்) ஆகியோர் உள்ளனர்.


