பஞ்சாபில் அகாலிதளம் பிரமுகர் சுட்டுக்கொலை; போதை கடத்தல் கும்பல் அட்டூழியம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம் கவுன்சிலர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.



அகாலிதளம் கவுன்சிலர் ஹர்ஜிந்தர் சிங் பஹ்மான். அமிர்தசரஸ் சேஹர்தா பகுதியில் குருத்வாரா அருகே பொதுவிழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தார். பின்னர் அங்குள்ள சாலை ஒன்றில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.


அப்போது, பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயம் அடைந்த ஹர்ஜிந்தர் சிங்கை அங்குள்ளோர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிதுநேரத்தில் அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு போதை பொருள் கடத்தல் கும்பலே காரணம் என்று ஹர்ஜிந்தர் சிங் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.


துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள் ஏற்கனவே ஹர்ஜிந்தர் சிங் வீடு மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அதே நபர்கள் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். குற்றம் நிகழ்ந்த இடத்தை சீல் வைத்துள்ள போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement