நடைமேடையை ஆக்கிரமித்து பேனர் அ.தி.மு.க.,வினர் மீண்டும் அடாவடி

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரியில், நடைமேடையை ஆக்கிரமித்து அ.தி.மு.க.,வினர் வைத்துள்ள விளம்பர பேனர்களால், பகுதிவாசிகள் தவித்து வருகின்றனர்.

கடந்த பிப்., 24 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பிறந்தநாளை, சம்பந்தபட்ட கட்சியினர் விழாவாக கொண்டாடினர்.

அதை முன்னிட்டு, கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப் பகுதிகளில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சியினரால், 200க்கும் மேற்பட்ட விளம்பன பேனர்கள், நடைபாதை மற்றும் அணுகுசாலைகளில் வைக்கப்பட்டு, இரு மாதங்களாக அகற்றப்படாமல் இருந்தன.

இதை சுட்டிக்காட்டி நம் நாளிதழில் தொடர் செய்தி வெளியானதால், அந்த பேனர்கள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் பிறந்தநாள் வந்தது.

அதை முன்னிட்டு, வண்டலுார் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலை, கூடுவாஞ்சேரி -- நெல்லிக்குப்பம் சாலை, வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில், 100க்கும் மேற்பட்ட பேனர்கள், அ.தி.மு.க.,வினரால் வைக்கப்பட்டன.

அந்த பேனர்கள் அனைத்தும், போலீசாரால் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், தேதி எதுவும் குறிப்பிடாமல், அ.தி.மு.க., சார்பில் கூடுவாஞ்சேரியில், நடைமேடையை ஆக்கிரமித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதை அகற்றும்படி, பகுதிவாசிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:

கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம் நுழைவு பகுதியில், ஜி.எஸ்.டி., சாலையோரம் உள்ள நடைமேடையை ஆக்கிரமித்து, ஜெயலலிதா பிறந்தநாளுக்கு பேனர் வைக்கப்பட்டது.

அந்த பேனர், 50 நாட்களை கடந்தும் அகற்றப்படாத நிலையில், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதால் அகற்றப்பட்டது.

இந்நிலையில் அதே இடத்தில், நாள் எதுவும் குறிப்பிடாமல், பொத்தாம் பொதுவாக ஒரு பேனர, நடைமேடையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேனரை அப்புறப்படுத்தி, நடைமேடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement