கனமழை எதிரொலி; பில்லூர் அணையில் இருந்து 16,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

சென்னை: தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பில்லூர் அணை
100 அடி கொள்ளவு கொண்ட கோவை மாவட்டம் பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,140 கனஅடியாக உள்ளது. அணையின் பாதுகாப்புக் கருதி, வரும் மொத்த தண்ணீரும் அப்படியே பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.


போலீசார் சார்பில், ஒலிபெருக்கி மூலம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பவானி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ, துணி துணிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
பவானிசாகர் அணை
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8,327 கன அடியில் இருந்து 13,667 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 71.62 அடியாகவும், நீர் திறப்பு 105 கன அடியாகவும் உள்ளது.
பஞ்சலிங்க அருவியில் குளிக்கத் தடை
திருமூர்த்தி மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் திருமூர்த்தி பஞ்சலிங்க அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கும் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு
கனமழை காரணமாக, கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. அணை மொத்த உயரம் 49.5 அடி. இன்று காலை நிலவரப்படி அணையில் 26.6 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
சிறுவாணி அணையில் இன்று 120 மில்லி மீட்டர் மழையும், சிறுவாணி அடிவாரத்தில் 128 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
பொன்னானி ஆறு
நீலகிரி பந்தலூரில் மழையின் தீவிரம் அதிகரிப்பால் பொன்னானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை எச்சரிக்கை செய்துள்ளனர். பொன்னானி மற்றும் அம்பலமூலா பகுதி நிவாரண முகாம்கள் தயார் நிலையில் திறக்கப்பட்டுள்ளது.

