ஹார்வர்டு பல்கலைக்கு அதிக மானியம் வழங்க மாட்டோம்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

புதுடில்லி: ''ஹார்வர்டு பல்கலைக்கு இனி அதிக மானியங்களை வழங்க மாட்டோம்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: ஹார்வர்டு பல்கலையில் ஒரு பிரச்னை இருக்கிறது. அங்கு 31 சதவீத வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை நிதியுதவியாக வழங்குகிறோம். இது அபத்தமானது. நாங்கள் ஹார்வர்டு பல்கலை க்கழகத்திற்கு அதிக மானியங்களை வழங்கி வருகிறோம். இனி அதிக மானியங்களை நாங்கள் வழங்க மாட்டோம்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் வெளிநாட்டினர் குறித்து விவரங்களை சொல்ல மறுக்கிறார்கள். நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். வெளிநாட்டு மாணவர்களுடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். 31 சதவீதம் என்பது மிகவும் அதிகம். அந்த பல்கலைக்கழத்தில் படிக்க விரும்பும் அமெரிக்கர்களுக்கு அங்கு இடம் கிடைப்பது இல்லை.
வெளிநாட்டு நிர்வாகம் ஏதும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு நிதி கொடுக்கவில்லை. நாங்கள் தான் செய்கிறோம். வெளிநாட்டு மாணவர்களின் பட்டியலை நாங்கள் பெற விரும்புகிறோம். அவர்கள் நலமாக இருக்கிறார்களா? இல்லையா என்பதைக் கண்டுபிடிப்போம். பலர் நலமாக இருப்பார்கள். இன்னொரு விஷயம் என்னவென்றால், அவர்கள் மிகவும் யூத விரோதிகள். இது அனைவருக்கும் தெரியும். அதை உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.




