பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிப்போம்: பிரதமர் மோடி உறுதி

ஆமதாபாத்: ''இந்தியாவில் இருந்து பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது,'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
குஜராத் மாநிலம், காந்தி நகரில் ரூ.5,536 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் 4வது பொருளாதார நாடானது இந்தியா. இப்போது நாம் ஜப்பானை விஞ்சிவிட்டோம் என்பது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். ஆறாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியபோது, நாடு முழுவதும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட உற்சாகம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
3 முறை தோல்வி
1947ம் ஆண்டிலேயே பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். சர்தார் படேலின் அறிவுரை புறக்கணிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து பயங்கரவாதத்தை அகற்ற தனது அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுடன் போர்கள் நடந்தபோது, பாகிஸ்தானை மூன்று முறை தோற்கடித்தோம். நேரடியாக போரிட்டு இந்தியாவை வீழ்த்த முடியாததால் பயங்கரவாத அமைப்புகள் மூலம் பாகிஸ்தான் மக்களை தாக்குகிறது.
தேசப்பற்று
பாகிஸ்தானின் கொடிகள் பயங்கரவாதிகளின் சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டன. மேலும் அவர்களின் ராணுவத்தினர் இறுதி சடங்கில் பங்கேற்றனர். நாங்கள் யாருடனும் பகைமையைத் தேடவில்லை. நாங்கள் அமைதியாக வாழ விரும்புகிறோம். முப்படையினரை பாராட்டி நாடு முழுவதும் எழுச்சி உடன் நடை பெறும் மூவர்ணக் கொடி பேரணி, மக்களின் தேசப்பற்றை வெளிப்படுத்துகிறது. நாட்டில் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடிபேசினார்.









