கேரளாவில் இன்று ரெட், நாளை ஆரஞ்ச் அலர்ட்; 16 இடங்களில் நிவாரண முகாம் அமைப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.



தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி உள்ளதால் கேரளாவில் 3 நாட்களை கடந்தும் மழை கொட்டி வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.


இதில் கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் திருச்சூர், மலப்புரம், காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.


நாளை (மே 28) கோழிக்கோடு, வயநாடுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடரும் கனமழையால் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகள் படுவேகமாக நிரம்பி வருகிறது.


மீனாட்சில், கோரப்புழா, மணிமலா, பெரும்பா உள்ளிட்ட ஆறுகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் இதுவரை 456 பேர் மீட்கப்பட்டு 16 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.


586 வீடுகள் பகுதியாகவும், 21 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.

Advertisement