ஜூனில் இயல்பை விட அதிக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

புதுடில்லி: வரும் ஜூன் மாதத்தில் இயல்பை விட அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை மே மாதம் முன்கூட்டியே துவங்கி பெய்துவருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் ஜூன் மாதம் இயல்பை காட்டிலும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:
ஜூன் மாதம் வடமேற்கு இந்தியாவில் சாதாரண பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது, அதே நேரத்தில் வடகிழக்கில் இயல்பை விட குறைவான மழை பெய்யக்கூடும். தீபகற்ப இந்தியாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் இயல்பை விட அதிகமான மழை பெய்யும்.

இயல்பை விட அதிகமான மழைப்பொழிவால் விவசாயம் மற்றும் நீர் வளங்களுக்கு நன்மை பயக்கும். ஆனால் வெள்ளம், போக்குவரத்துக்கு இடையூறுகள், பொது சுகாதார கவலைகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு போன்ற அபாயங்களையும் ஏற்படுத்தும்.
வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும், மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் அருகிலுள்ள பகுதிகளிலும் இயல்பை விடக் குறைவான வெப்ப அலை நாட்கள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement