மதுரை அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் 'தனிமை வார்டு'

மதுரை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியதை அடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் 65 படுக்கைகளுடன் கூடிய 'தனிமை வார்டு' தயார் நிலையில் உள்ளது.

மதுரையில் சுகாதாரத்துறை கணக்கெடுப்பின் படி கிராமம், நகர்ப்புறங்களில் நேற்று 17 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 25 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

டெங்கு, கொரோனா தொற்று பதிவாகவில்லை.

அரசு மருத்துவமனையில் பெரியவர்களுக்கு 50 படுக்கை, குழந்தைகளுக்கு 15 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக டீன் அருள் சுந்தரேஷ் குமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 30 பேர் காய்ச்சலுக்காக (நேற்று) அனுமதிக்கப்பட்டனர். இணைநோய்களுடன் கூடிய காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 44 பேர் பொதுவார்டு, மருத்துவ வார்டு உட்பட பல்வேறு நோய் தொற்றா வார்டுகளில் சிகிச்சையில் உள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகளை கண்டறியும் குழு மூலம் டைபாய்டு, டெங்கு, மலேரியா, சார்ஸ் கோவிட் உட்பட 12 வகை காய்ச்சல் கண்டறியப்படுகிறது. இதில் கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்பட்டால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர்.

அதற்காக 50 படுக்கைகளுடன் கூடிய தனிமை வார்டு பெரியவர்களுக்கும் 15 படுக்கைகளுடன் கூடிய 'தனிமை வார்டு' குழந்தைகள் நலப்பிரிவில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை யாரும் சிகிச்சைக்காக சேர்க்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வார்டில் அனுமதிக்கப்பட்டால் அவர்களை கையாளும் டாக்டர், நர்ஸ்களுக்கான 'பி.பி.இ.,' எனப்படும் நோய் தொற்றா சிறப்பு உடை கவசம், என்.95 முகக்கவசம் போதுமான அளவில் இருப்பில் வைத்துள்ளோம் என்றார்.

Advertisement