டிரைவர் வெட்டி கொலை மர்ம கும்பலுக்கு வலை

வானுார்:வானுார் அருகே, பைக்கில் சென்ற டிரைவரை வழிமறித்து, சரமாரியாக வெட்டி கொலை செய்த கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல், 47; திருவக்கரையில் உள்ள கிரஷரில், டிப்பர் லாரி டிரைவர். திருவக்கரை கிராமத்தில் நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்த்து விட்டு, நேற்று அதிகாலை 2:00 மணிக்கு பைக்கில் கிரஷருக்கு சென்று கொண்டிருந்தார்.
இருளர் குடியிருப்பு பகுதி அருகே நின்றிருந்த மர்ம நபர்கள், கதிர்வேலை வழிமறித்தனர். இதில், தப்பிக்க முயற்சித்த அவரை, அந்த கும்பல் விரட்டி, சரமாரியாக வெட்டி விட்டு தலைமறைவானது. ரத்த வெள்ளத்தில் சரிந்த கதிர்வேல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
இறந்த கதிர்வேலுவிற்கு, மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர்.