'தீங்கு இழைப்போரை பாதிக்கப்பட்டோருக்கு இணையாக ஒருபோதும் கருத மாட்டோம்'

1

புதுடில்லி: “தீங்கு இழைப்போரை, பாதிக்கப்பட்டவர்களுக்கு இணையாக கருதுவதை இந்தியா ஒருபோதும் ஏற்காது,” என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி, இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று டில்லி வந்தார்.

அவரை, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்று, பேச்சு நடத்தினார்.

அப்போது ஜெய்சங்கர் கூறியதாவது:

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரிட்டன் அரசுக்கு நன்றி.

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் போராடும். தீங்கு இழைப்போரை, பாதிக்கப்பட்டவர்களுக்கு இணையாக கருதுவதை இந்தியா ஒருபோதும் ஏற்காது.

இந்தியா - பிரிட்டன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் என்பது மைல்கல்லாக கருதுகிறோம்.

இது, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவுகளை வலுப்படுத்த உதவும்.

ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டர், தொலைத்தொடர்பு, பயோடெக் போன்ற துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி கூறுகையில், “புதிய தொழில்நுட்பத்தை வளர்ப்பது, காலநிலை நெருக்கடியை சமாளித்தல், மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்றவற்றில் இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம்,” என்றார்.

பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி, நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு கடந்த மாதம் சென்றார்.

அங்கு, இந்தியாவுடன் போர் நிறுத்தம் செய்ததற்கு நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement