மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு தி.மு.க.,வினர் ரகசியமாக வருவர் தமிழிசை நம்பிக்கை
மதுரை, : ''மதுரையில் ஜூன் 22ல் நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு தி.மு.க.,வினர் ரகசியமாக வருவர். முருகன் மீது பக்தி கொண்டவர்கள் நிச்சயமாக வருவர்,'' என, மதுரையில் பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கூறினார்.
மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த பின் அவர் கூறியதாவது: மதுரை சங்கம் வைத்து தமிழை வளர்த்த இடம். அதனால் எங்களை சங்கிகள் என்கின்றனர். அதுகுறித்து கவலைப்படவில்லை. சங்கம் வைத்த இடத்தில் சங்கிகளின் சக்தி அதிகமாகிறது.
மதுரையில் இன்று (ஜூன் 8) பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் மத்தியமைச்சர் அமித்ஷா பங்கேற்பது உற்சாகம் அளிக்கிறது. அவர் புது நிர்வாகிகளுக்கு புது ரத்தம் பாய்ச்ச உள்ளார். அவரது வருகை தி.மு.க., கூட்டணிக்கு பதட்டத்தை தருகிறது.
உண்மையான தி.மு.க.,வினருக்கு பக்தி இருக்கிறது. அமைச்சர் துரைமுருகன் என அனைவருமே கடவுளை ரகசியமாக வழிபடுகின்றனர்.
தமிழகத்தில் 3000 கோயில்களில் நடந்த கும்பாபிஷேகங்களில் ஒன்றிலாவது முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றாரா. கோயிலில் உள்ள தீபத்திற்கும் 'ஸ்டிக்கர்' ஒட்டுகிறீர்கள். இதை கடவுள்கூட மன்னிக்க மாட்டார்.
திருநெல்வேலி மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. இவ்வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கவில்லை. தி.மு.க., கூட்டணியில் இருந்து கொண்டு தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகையால் எந்த ஒரு கண்டன போஸ்டரும் ஒட்ட முடியவில்லை. கண்ணகியால் நீதி கிடைத்த மண் மதுரை. 2026 ல் தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றார்.