கோடை வெயில் உக்கிரத்தால் கோழிகள் இறப்பு அதிகரிப்பு
சென்னை : கோடை வெயில் உக்கிரத்தால், கோழிகள் இறப்பு அதிகரித்துள்ளது. தினமும் 40 முதல் 50 கோழிகள் வரை உயிரிழப்பதாக, கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
தமிழகம் முழுதும், 40,000 கறிக்கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றில் தினமும், 70 லட்சத்தில் இருந்து, 1 கோடி கோழிகள் வரை விற்கப்படுகின்றன. கடந்த ஏப்., மாதம் கோடை வெயில் துவங்கியது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தினமும் 40 முதல் 50 கோழிகள் வரை இறக்கின்றன.
இதுகுறித்து, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாய நலச்சங்க செயலர் தாந்தோனி கூறியதாவது:
பொதுவாக, 'பிராய்லர்' கோழிகள், 42 நாட்கள் வரை பண்ணைகளில் வளர்க்கப்படும். அதன்பின், தாமதிக்காமல் இறைச்சி கடைகளுக்கு விற்கப்படும். கடந்த ஏப்., மாதம் கோடை காலம் துவங்கியதில் இருந்து, வெயில் தாக்கம் தொடர்கிறது.
பொதுவாக கோழிகள், இரு மடங்கு தீவனம், ஒரு மடங்கு தண்ணீர் குடிக்கும். ஆனால், வெப்பம் காரணமாக ஒரு மடங்கு தீவனம், இரு மடங்கு தண்ணீர் குடிப்பதால், அவைகளுக்கு வெள்ளை கழிச்சல் போக்கு அதிகரிக்கிறது. இதனால், 35 நாட்களில் 2 கிலோ வரை எடை கூடக் கூடிய கோழிகள், தற்போது அந்த எடையை எட்டுவதற்கு, 50 நாட்களுக்கு மேல் எடுக்கின்றன. கூடுதலாக, 10 முதல் 15 நாட்கள் வரை பண்ணையில் வைத்து பாதுகாக்க வேண்டியுள்ளது.
இச்சூழலில், வெயிலின் தாக்கத்தால், 35 நாட்களுக்கு மேற்பட்ட கோழிகளுக்கு அதிகளவில், 'ஹீட் ஸ்ட்ரோக்' எனும் நோய் வருகிறது. இந்நோய்க்கு, 2 கிலோ எடையுடைய கோழிகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. உடனடியாக அவை இறந்து விடுகின்றன.
கோடையை தவிர மற்ற நாட்களில் தினமும் ஐந்து கோழி வீதம் இறக்கும் நிலையில், தற்போது தினமும் 40 முதல் 50 கோழிகள் வீதம் இறக்கின்றன. சில பண்ணைகளில், 100 கோழிகள் வரை கூட இறக்கின்றன.
கோழி குஞ்சுகளை வழங்கும் தனியார் நிறுவனங்கள் சார்பில், சில மருந்துகள் தருகின்றனர். ஆனாலும், இறப்பு எண்ணிக்கை குறையவில்லை. இதனால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.