துார்ந்து போன கழிவுநீர் கால்வாயில் துர்நாற்றம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட கடலாடி ரோடு பகுதியில் கால்வாய் துார்ந்து போனதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இங்குள்ள மறவர் தெரு, காவல்காரன் சந்து, கடலாடி ரோடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் செல்வதற்காக ரோட்டோரத்தில் கால்வாய் அமைக்கப்பட்டு கழிவுநீர் செல்கிறது.
இந்நிலையில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு ரோடு மட்டும் பராமரிப்பு பணி செய்யப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கால்வாய் துார்ந்து சேதமடைந்துள்ளது. கழிவுநீர் முறையாக செல்லாமல் தேங்கியுள்ளது. தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.