திருவள்ளூர் அரசு பள்ளிகளில் கல்வி, சுகாதாரம்...கேள்விக்குறி:ஆசிரியர்கள் பற்றாக்குறை, கழிப்பறை இல்லாமல் அவதி

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 752 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் மாணவ- மாணவியர் சிரமப்படுகின்றனர். இதனால் கல்வி, சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பொன்னேரி என இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் 944 துவக்கப்பள்ளிகள், 265 நடுநிலைப்பள்ளிகள், 145, உயர்நிலைப்பள்ளிகள், 118, மேல்நிலைப்பள்ளிகள், என 1,472 அரசு பள்ளிகள் உள்ளன.

பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் கல்வி கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

அரசு பள்ளிகளில் அலுவலக பணியாளர், உதவியாளர், உடற்பயிற்சி ஆசிரியர், ஆய்வக உவியாளர், காவலாளி, துப்புரவு பணியாளர்கள் போன்ற பணியிடங்களும் காலியாக உள்ளன.

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பணியாற்ற வேண்டும். ஆனால் பல பள்ளிகளில் இந்த முறை நடைமுறையில் இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. மாவட்டம் முழுதும் 752 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. பல பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம் எந்த பள்ளியிலும் இல்லாததால் மாணவர்களின் விளையாட்டுத் திறனும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு பள்ளிகளில் போதிய கழிப்பறை இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். தனியார் பள்ளி கழிப்பறைகளில் 20 பேருக்கு ஒரு பீங்கான் என நடைமுறையில் உள்ளது. ஆனால் அரசு பள்ளிகளில் இந்த நடைமுறை இல்லாததால் மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், உதவியாளர்கள், துப்புரவு பணியாளர், பாதுகாவலர் பணிகளை நியமிக்க வேண்டும். மேலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கழிப்பறை வசதியும் செய்து தர வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அதிகாரி பணியிடமே காலியாக உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மாவட்டத்தில் காலியாக உள்ள 419 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 106 பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டது. மீதமுள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் இன்றுவரை பணி ஓய்வு பெற்றவர்களையும் சேர்த்து மொத்தம் 752 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலிப்பணியிடங்கள் குறித்து அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.



காலிப்பணியிடங்கள்




மொத்த காலிபணியிடங்கள் 752


துவக்கப்பள்ளி 175


நடுநிலைப்பள்ளி 206


உயர்நிலைப்பள்ளி 185


மேல்நிலைப்பள்ளி 186

Advertisement