கால்வாயைக் காணோம் கண்ணீரில் விவசாயிகள் 

சோழவந்தான்: சோழவந்தான் அருகே இரும்பாடியில் பாசன கால்வாய்கள் துார்வாரப்படாமல் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் தண்ணீர் வராமல் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

விவசாயி கதிரவன்: இரும்பாடி பகுதிகள் பெரியாறு கால்வாயில் இருந்து வரும் வடகரை வாய்க்கால் பாசனம் 4 ஐ சேர்ந்தது.19 முதல் 24 வரை உள்ள மடைகள் அதன் கால்வாய்கள் இப்பகுதி பாசனத்திற்கு பயன்படுகிறது. இவை துார்வாரப்படாமலும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாலும் தண்ணீர் முழுமையாக செல்ல முடியவில்லை.19, 20 ம் எண் வாய்க்கால்கள் மிக மோசமாக சேதம் அடைந்துள்ளன.இவ்விரண்டும் இரும்பாடி பகுதியின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

இங்குள்ள மந்தைக் குளம் இரண்டு கால்வாய்களை மட்டுமே நம்பியுள்ளது. கால்வாயில் தண்ணீர் வரத்து இல்லாததால் குளம் நிரம்பி பல ஆண்டுகளாகிறது.இதனால் இரும்பாடி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது.

குளமும் புதர்களால் நிறைந்து காடு போல் மாறிவிட்டது.குடிநீருக்கும், விவசாயத்திற்கும் ஆதாரமாக உள்ள கால்வாய்களை சரி செய்ய வேண்டும். பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை என்றார்.

Advertisement