மாநில பிடே ரேட்டிங் செஸ் 160 வீரர் - வீராங்கனையர் மோதல்

சென்னை, தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் ஆதரவில், திருவள்ளூர் மாவட்ட செஸ் சங்கம் சார்பில், மாநில அளவிலான பிடே ரேட்டிங் செஸ் போட்டி, மேல்மருவத்துாரில் உள்ள ஆதிபராசக்தி இன்ஸ்டிடியூட்டில் நேற்று காலை துவங்கியது.

போட்டியில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட, மாநிலம் முழுதும் இருந்து, 160 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.

ஐந்து நாட்கள் நடக்கும் இப்போட்டியில், தினமும் இரண்டு சுற்றுகள் வீதம், மொத்தம் ஒன்பது சுற்றுகள் அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன.

'பிடே ரேட்டிங்' அடிப்படையில், போட்டிகள் நடக்கின்றன. ஓபன் முறையில், இருபாலருக்கும், 25 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கும், தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. பேட்டியில் வெற்றி பெறுவோருக்கு, ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

காலை துவங்கிய முதல் நாள் போட்டியை, வித்யாசாகர் கல்வி நிறுவனத்தின் தாளாளர் விகாஸ் சுரானா, செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க சங்கத்தின் தலைவர் ராஜாராமன், செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டிகள் தொடர்ந்து, 22ம் தேதி வரை நடக்கின்றன.

Advertisement