குடும்ப விஷயத்தைதான் பேசப்போறோம்...! மண்டல குழுவில் நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு

ராயபுரம், 'நாங்க ஒன்று கூடி, குடும்ப விஷயத்தைதான் பேசுவோம்; செய்தி சேகரிக்கிறது அளவுக்கு ஒன்றும் இருக்காது; வர வேண்டாம்' என, ராயபுரம் மண்டல கூட்டத்திற்கு சென்ற நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல குழு கூட்டம், மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல குழு தலைவர் ஸ்ரீராமலு தலைமை வகித்தார்.

மண்டல அதிகாரி பரிதா பானு மற்றும் கவுன்சிலர்கள், சுகாதாரத்துறை, குடிநீர் வாரிய, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

செய்தி சேகரிக்க நிருபர்கள் சென்றனர். 'மண்டல கூட்டம் என்பது, எங்களின் குடும்ப நிகழ்வு. நாங்கள் ஒன்று கூடி, குடும்ப விஷயத்தை பற்றிதான் பேசுவோம். செய்தி சேகரிக்கிற அளவுக்கு ஒன்றும் இருக்காது. நீங்கள் வரவேண்டாம்; அனுமதி கிடையாது' எனக்கூறி, பத்திரிகையாளர்களை விரட்டியடிக்காத குறையாக வெளியேற்றினார்.

மண்டலக்குழு கூட்டங்களில், கவுன்சிலர்கள் தங்கள் வார்டு சார்ந்த கோரிக்கைகள் முன்வைப்பர். பெரும்பாலான கவுன்சிலர்கள், மண்டலக்குழு தலைவர் மீதும், மாநகராட்சி அதிகாரிகள் மீதும், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பர். சில நேரங்களில் கமிஷன் விவகாரங்களும் பெரிதாகிவிடும். இதுபோன்ற செய்திகள் வெளியில் வரக்கூடாது என்பதற்காக, மண்டல குழு தலைவர், நிருபர்களுக்கு அனுமதிக்காதது தெரிய வந்துள்ளது.

Advertisement