'கோமுல்' பால் உற்பத்தியாளர் பேரவை தேர்தல்: 13 இயக்குநர் பதவிக்கு காங்.,கில் 2 அணி போட்டி

கோலார் மாவட்டத்தில், 'கோமுல்' எனும் கோலார் -- சிக்கபல்லாப்பூர் பால் உற்பத்தியாளர்கள் பேரவையில், 13 இயக்குநர்களை தேர்வு செய்ய, இம்மாதம் 25ல் தேர்தல் நடக்கிறது. இதில் இரு கோஷ்டிகளாக காங்கிரஸ் கட்சியினர் களமிறங்குவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், கோலார் மாவட்ட ஜில்லா பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 13ம் தேதி துவங்கியது. மொத்தம் 32 பேர், 45 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுவை வாபஸ் பெற, நாளை கடைசி நாள்.

ஓட்டுப்பதிவு



இயக்குநர் பதவிக்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கோலாரின் கொத்துார் மஞ்சுநாத், மாலுாரின் நஞ்சே கவுடா, பங்கார்பேட்டையின் எஸ்.என்.நாராயணசாமி ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே மாலுார் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா, கோமுல் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டுப்பதிவு, 25ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கோலார் பெண்கள் முதல்நிலைக் கல்லுாரியில் நடக்கிறது.

கோலார் - சிக்கபல்லாப்பூர் பால் உற்பத்தியாளர்கள் பேரவையில் 937 சங்கங்கள் உள்ளன. இவர்கள், இரு பெண்கள் உட்பட 13 இயக்குநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

2 அணிகள்



கோலார் வடக்கு பிரிவில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் அமைச்சர் முனியப்பா ஆதரவாளரான பிளாக் காங்கிரஸ் தலைவர் பிரசாத் பாபு மனைவி மஹாலட்சுமியும், முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் ஆதரவாளரான ரேணுகாவும்; கோலார் தெற்கு பிரிவில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் ரமேஷ் குமார் ஆதரவாளரான காந்தா, கே.ஹெச்.முனியப்பா ஆதரவாளரான பிரதிபாவும்; தங்கவயல் தொகுதியில் ரமேஷ்குமார் ஆதரவாளரான ஜெயசிம்மா கிருஷ்ணப்பாவும், முனியப்பா ஆதரவாளரான குள்ளஹள்ளி லட்சுமப்பா என்பவரும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் வலுத்துள்ளது.


ஹை கமாண்ட் யார்?

காங்கிரசின் கோலார் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத், எம்.எல்.சி., அனில்குமார் ஆகியோர் பங்கார்பேட்டை காங்., - எம்.எல்.ஏ., எஸ்.என்.நாராயணசாமிக்கு எதிராக செயல்பட துவங்கி உள்ளனர்.எனவே, 'எங்கள் ஹை கமாண்ட் ரமேஷ் குமார் தான். அவர் அறிவித்துள்ள 13 பேரையும் நாங்கள் வெற்றி பெற செய்வோம்' என, இவர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பங்கார்பேட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ., எஸ்.என்.நாராயணசாமி கூறுகையில், ''மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் ஆகியோர் தான், 'எங்களுக்கு ஹை கமாண்ட்'. ரமேஷ் குமாரை ஏற்க முடியாது. வயதில் மூத்தவர் என்பதால் அவரை கவுரவிக்கிறோம். அவர், ஹை கமாண்ட் என்றால், எங்கள் அனைவரையும் அழைத்து பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை,'' என்றார்.இதனால் ரமேஷ் குமார் அணியினர் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.



- நமது நிருபர் -

Advertisement