சிறுவாணி அணையில் 50 செ.மீ., மதகு திறந்து தண்ணீர் வெளியேற்றம்

கோவை : சிறுவாணி அணையில் இருந்து, 50 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதனால், கன மழை பொழிந்தும் நீர் மட்டம் உயரவில்லை.

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் சிறுவாணி அணை அமைந்துள்ள பகுதியில், தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. மொத்த உயரம், 50 அடியாக இருந்தாலும், 44.61 அடிக்கே நீர் தேக்குவது வழக்கம்.

கேரள நீர்ப்பாசனத்துறையினர் நடப்பாண்டு அதற்கு முன்னதாகவே மதகை திறந்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

நேற்று முன்தினம், 90 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதனால், நீர் மட்டம், 2 அடி சரிந்து, 41.33 அடியாக இருந்தது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 84 மி.மீ., மழை பெய்திருந்தது.

முத்திக்குளம், பாம்பாறு, பட்டியாறு உள்ளிட்ட அருவிகளில் இருந்து நீர் வரத்து காணப்படுகிறது. மதகு திறந்திருப்பதால், தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அதனால், நீர் மட்டம் மேலும் உயரவில்லை.

அடம் பிடிக்கும் கேரளா

மதகை மூடச்சொல்லி, கோவை மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியும் கூட, கேரள நீர்ப்பாசனத்துறையினர் அடைக்காமல் இருக்கின்றனர். அதனால், மழை பெய்தும் கூட அணையின் நீர் மட்டம் உயராமல் இருக்கிறது. நேற்றும், 41.33 அடியாகவே நீர் மட்டம் இருந்தது. குடிநீர் தேவைக்கு, 6.78 கோடி லிட்டரே எடுக்கப்பட்டது. சிறுவாணி அடிவாரத்தில், 23 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

Advertisement