தஞ்சை அருகே மண்ணரிப்பால் சிதைந்த சங்க கால ஈமத்தாழிகள் கண்டெடுப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பாளையப்பட்டி பகுதியில், ஈமத்தாழிகள் கிடப்பதாக, முன்னாள் பஞ்., தலைவர் கமலதாசன் தகவலில், கல்வெட்டு ஆய்வாளரும், மன்னர் சரபோஜி அரசு கல்லுாரி தமிழ்துறை பேராசிரியர் கண்ணதாசன், பொந்தியாக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தில்லைகோவிந்தராஜன், வழக்கறிஞர் ஜீவக்குமார், ஓய்வு பெற்ற சரஸ்வதி மகால் நுாலக விற்பனை எழுத்தர் நேரு ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:
பண்டைய தமிழகத்தில், இறந்தவர்களின் உடல்களை வைத்து, மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதை கலன்களே, ஈமத் தாழிகள். இதற்கு, முதுமக்கள் தாழி, முதுமக்கள் சாடி, ஈமப்பேழை, மதமதக்கா பானை என பெயர்களும் உண்டு.
முதுமக்கள் தாழி அடக்க முறை, சங்க காலத்தில் இருந்து வருவதாக, சான்றாக, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் என்னும் சோழ மன்னன் இறப்பை குறித்து, ஐயூர் முடவனார் என்பவர், பெரிய உருவம் கொண்ட கிள்ளிவளவனுக்கு ஏற்ப தாழி செய்ய முடியுமா என குயவனிடம் கேட்டதாக, புறநானுாறு பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படை வீரர்கள் தங்கும் பகுதி, பாளையம் என அழைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாகவேஇவ்வூருக்கு, பாளையப்பட்டி என பெயர் வந்தாக வரலாறு உண்டு. ஈமத்தாழியை ஒட்டி ஓடும் வாரியை, தாழிவாரி என அழைக்கப்பட்ட நிலையில், திரிந்து தாழவாரி என மாறியுள்ளது.
இப்பகுதி, 54 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக அமைந்துள்ளது, இது சோழ மண்டலத்துள் கண்டறியப்பட்ட பெரிய ஈமக்காடுகள்.
அகன்ற வாய்களை கொண்ட தாழிகளின் கழுத்துப்பகுதியில் சங்கிலி கோத்தது போன்ற அழகிய வேலைப்பாடு காணப்படுகிறது. 25க்கும் மேற்பட்ட தாழிகள் மண்ணரிப்பால் சிதைந்து கிடக்கின்றன. இதில் இரும்பாலான பொருட்களின் எச்சங்களும் சிதைந்த நிலையில் உள்ளன.
மேலும், போரில் இறந்தவர்களின் சடலத்தை எரித்து, எஞ்சிய சாம்பலைச் சிறிய மட்கலயங்களில் போட்டு, புதைத்திருக்க வேண்டும் என தெரிவருகிறது. மேலும், இங்கு மனிதர்கள் வசித்ததற்கான பல்வேறு சான்றுகள் உள்ளன.
எங்களால் ஆய்வு செய்யப்பட்ட இடம், அரசுக்கு சொந்தமானது. எனவே, தமிழ் பல்கலைக் கழகத் தொல்லியல் துறை, தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையால் ஆய்வு செய்தால், சோழ மண்டலத்துச் சங்க காலத் தொன்மை வரலாற்றையும், அக்கால மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டினையும் வெளிக்கொண்டு வர முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.