வருவாய்த்துறை அலுவலகங்கள் வெறிச்சோடின

திருப்பூர்; வருவாய்த்துறையினரின் தற்செயல் விடுப்பு போராட்டத்தால், திருப்பூரில் நேற்று அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தமிழகம் முழுவதும் நேற்று தற்செயல் விடுப்பு மற்றும் தர்ணா போராட்டம் நடந்தது.

திருப்பூர் மாவட்டத்தில், வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர்கள், துணை தாசில்தார், தாசில்தார் நிலையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் 515 பேர், நேற்று தற்செயல் விடுப்பு எடுத்தனர்.

இதனால், திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தின் பல்வேறு பிரிவுகள், திருப்பூர் வடக்கு, தெற்கு தாலுகா அலுவலகங்கள் உள்பட பெரும்பாலான அரசு அலுவலகங்களில், அலுவலர்கள் இன்றி, இருக்கைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழ்நாடு கிராம நிர்வாக முன்னேற்ற சங்க மாநில செயலாளர் பிரபு தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னம்பாளையம்முதல் கலெக்டர் அலு வலகம் வரை ஊர்வலம் நடத்தப்பட்டது.

கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே வருவாய்த்துறையினர் 300 பேர், தர்ணா பந்தலில் அமர்ந்தனர்.

வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவை துறைகளில் பணிபுரிந்துவரும் அனைத்து நிலையிலான அலுவலர்களுக்கும், உரிய பணி பாதுகாப்பு அளிக்கவேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்பட்சத்தில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement