செவிலிமேடு பாலத்தில் ஓட்டை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்:செவிலிமேடு பாலாறு பாலத்தில், ஓட்டை ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், செவிலிமேடிற்கும், புஞ்சையரசந்தாங்கல் கிராமத்திற்கும் இடையே செல்லும் பாலாற்றின் குறுக்கே, 20 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது.

இப்பாலம் வழியாக பெருநகர், மானாம்பதி, உத்திரமேரூர் வந்தவாசி, செய்யாறு, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இப்பாலத்தின் மீது போடப்பட்டுள்ள சாலையின் இணைப்பு பகுதியில், சேதமடைந்து பெரிய அளவில் ஓட்டை ஏற்பட்டுள்ளது.

பள்ளம்போல உள்ள இந்த ஓட்டையில் கற்கள் வைக்கப்பட்டுள்ளது.மின்விளக்கு வசதி இல்லாத இப்பாலத்தில், இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ள பகுதியில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், செவிலிமேடு பாலாறு பாலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement