கடனுக்காக ஆசிரியரை கடத்தி அராஜகம் போலீசில் புகார் அளிக்க குடும்பத்தினர் பீதி

விஜயபுரா : வாங்கிய கடனுக்காக ஆசிரியரை கடத்தி பணயமாக பிடித்து வைத்திருக்கும் கந்து வட்டிக்காரர்கள் மீது, போலீசில் புகார் அளிக்கவும் குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.
விஜயபுரா மாவட்டம், பசவனபாகேவாடி தாலுகாவின், படகானுார் கிராமத்தில் வசிப்பவர் உதயகுமார் பாவிமனி, 45. இவர், பெங்களூரில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவருக்கு சிவப்பா, ஆனந்த், யஷ்வந்த் என்ற நான்கு சகோதரர்கள் உள்ளனர்.
சிவப்பா, மஹராஷ்டிராவின் கொல்லாபுர் நகரில், மணல் அள்ளும் கூலித்தொழிலாளி. ஆனந்த், ரத்னகிரியில் ஓட்டுநராகவும், யஷ்வந்த், படகனுர் கிராம பஞ்சாயத்திலும் பணியாற்றுகின்றனர். வயதான தாயுடன் வசிக்கின்றனர்.
உதயகுமார் பாவிமனி, ஓய்வு பெற்ற ஆசிரியர் பிரபாகரிடம், பணம் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் எவ்வளவு கடன் வாங்கினார் என்பது, குடும்பத்தினருக்கு தெரியவில்லை. வறுமை காரணமாக கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. பணத்தை திருப்பிக் கேட்டு, பிரபாகர் நெருக்கடி கொடுத்துள்ளார்.
தனிப்பட்ட காரணத்தால், 28 நாட்களுக்கு முன்பு, உதயகுமார் கோவாவுக்கு சென்றிருந்தார். இவரை பிரபாகர் கடத்திச் சென்று, பணைய கைதியாக வைத்துள்ளார். ஊருக்கு சென்றவர் வீடு திரும்பாததால், உதயகுமாரின் குடும்பத்தினர் தேடி அலைந்தனர்.
அப்போதுதான் அவரை, கடனுக்காக பிரபாகர் பணயமாக வைத்திருப்பது தெரிந்தது.
அவரது மனைவி ரேஷ்மா, கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மூலமாக, பிரபாகரிடம் தன் கணவரை விடுவிக்கும்படி மன்றாடினார். ஆனால் அவர், “பணத்தை கொடுத்தால் மட்டுமே, உதயகுமாரை விடுவிப்போம். இல்லையென்றால் வேறு இடத்துக்கு மாற்றுவோம்,” என, மிரட்டுகிறார்.
உதயகுமாரை ஏதாவது ஆகிவிடும் என்ற பயத்தால், போலீசில் புகார் அளிக்க குடும்பத்தினர் அஞ்சுகின்றனர். மூன்று ஏக்கர் பூர்விக நிலத்தை விற்று, அந்த பணத்தில் கடனை அடைத்து அவரை மீட்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இந்த விஷயம், விஜயபுரா எஸ்.பி., லட்சுமண் நிம்பரகி கவனத்துக்கு சென்றுள்ளது. அவரும் உதயகுமாரின் குடும்பத்தினரிடம், புகார் பெற்று நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உதயகுமாரின் மனைவி ரேஷ்மா, நேற்று அளித்த பேட்டி:
பிரபாகர், விரைவில் பணத்தை கொடுக்கும்படி, எங்களுக்கு தொல்லை கொடுக்கிறார். தினமும் போன் செய்கிறார். “இன்னும் எத்தனை நாட்கள், உன் கணவரை நாங்கள் வைத்திருப்பது? உனக்கு வெட்கம் இல்லையா?” என, திட்டுகிறார்.
பயத்தால் நாங்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை. என் கணவர் எவ்வளவு கடன் வாங்கினார் என்பதும் தெரியவில்லை. நிலத்தை விற்க முயற்சிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் உறுப்பினராக கமலுக்கு அழைப்பு
-
கோவை, நீலகிரியில் இன்று கனமழை
-
மின் கணக்கீட்டு அட்டைக்கு 'குட்பை'; கட்டண விபரம் இனி செயலியில் வரும்
-
பருத்திக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை
-
முதனை கிராம விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை முகாம்
-
'சைபர்' அடிமையாக்கும் மர்ம கும்பல்; சென்னையில் போலி 'கால் சென்டர்'