நீர் மட்டம் உயர்வு எதிரொலி இடுக்கி அணை திறக்க வாய்ப்பு

மூணாறு : கேரளா இடுக்கி அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருவதால் இந்தாண்டு அணை திறக்க வாய்ப்புள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை வரலாற்று சிறப்புமிக்கதாகும். மொத்த உயரம் 554 அடி. இடுக்கி, செருதோணி ஆகிய அணைகள் அருகருகே கட்டப்பட்டுள்ளதால், அணை நிரம்பும்போது கடல் போன்று பிரமிப்பை ஏற்படுத்தும். இடுக்கி அணை 'ஆர்ச்' வடிவில், செருதோணி அணை நேர் வடிவில் கட்டப்பட்டுள்ளதால் செருதோணி அணையில் மட்டும் மதகுகள் உள்ளன. அணையின் நீர் மூலம் மூலமற்றம் நீர்மின்நிலையத்தில் 780 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும்.

இடுக்கி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று மாலை 5:00 மணி நிலவரப்படி நீர்மட்டம் 302.09 அடியாக இருந்தது. இதே கால அளவில் கடந்தாண்டு நீர்மட்டம் 173.78 அடியாக இருந்தது.

தென்மேற்கு பருவ மழை செப்டம்பர் வரை நீடிக்கும் என்பதாலும், முல்லைபெரியாறு அணை திறக்க வாய்ப்புள்ளதால், பெரியாறு ஆறு வழியாக தண்ணீர் இடுக்கி அணைக்கு வந்து சேரும் என்பதாலும் இடுக்கி அணையின் நீர் மட்டம் வெகுவாக விரைவில் உயர்ந்து விடும். அதனால் இந்தாண்டு அணை திறக்க வாய்ப்புள்ளது.

இடுக்கி அணை 1973ல் பயன்பாட்டிற்கு வந்த பிறகு 1981ல் அணை முதன்முதலாக திறக்கப்பட்டது. பின்னர் 1992லும், 2018ல் ஆகஸ்ட்டில் ஒரு மாதமும், அக்டோபரிலும் என இருமுறை, 2022 ஆக.7 ஆகிய நாட்களில் அணை திறக்கப்பட்டது குறிப்பிடதக்கது. இதில் இருந்து செல்லும் நீர் கடலில் சேரும்.

Advertisement