'ஆட்சி குறித்து அமித்ஷாவும் பழனிசாமியும் முடிவு செய்வர்'

திருநெல்வேலி: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கடவுளை கல்லாக நினைத்து உடைக்கக் கூடியவர்கள் மற்ற மதங்களை இழிவாக பேசக்கூடியவர்கள் மாநாடு நடத்தினால் முருகன் எப்படி அவர்களுடன் செல்வார்.

அவர்கள் நடத்திய பழநி முருகன் மாநாட்டில் எவ்வளவு பேர் கலந்து கொண்டார்கள் என்பது மக்கள் அறிவார்கள். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். மாநாட்டில் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என கேட்கவில்லை.

எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு தமிழகத்தில் 1989ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. 2006ல் மைனாரிட்டி அரசு நடத்தினர். தொடர்ந்து 2வது முறையாக அவர்கள் ஆட்சிக்கு வந்ததில்லை. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி குடும்ப கட்சிக்கு ஆட்சிக்கு மக்கள் வாக்களிக்க விரும்பவில்லை.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதிலிருந்து தி.மு.க., மாற்றி மாற்றி பேசி வருகின்றனர். அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பழனிசாமி பேசி முடிவு செய்வர் என்றார்.

முதலமைச்சராக பழனிசாமியை அமித்ஷா கூறவில்லையே என்ற கேள்விக்கு, கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே அதனை அமித்ஷா தெரிவித்துவிட்டார் என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருவாரா என்ற கேள்விக்கு நல்லதே நடக்கும் என பதிலளித்து சென்றார்.

Advertisement