பிற கட்சிக்கு ஆதரவாக செயல்படுவோரை கண்காணித்து களையெடுக்கும் அ.தி.மு.க.,

திண்டுக்கல்: பிற கட்சியினருக்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க.,வினரை கண்காணித்து கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தலைமை துவங்கியுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்குபின் அ.தி.மு.க., தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. எனவே பிற கட்சிகளை காட்டிலும் 2026 தேர்தல் அ.தி.மு.க.,விற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கேற்றாற்போல் பா.ஜ., உடனான கூட்டணியும் உறுதிசெய்யப்பட்டு பணிகள் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் தி.மு.க., பன்னீர்செல்வம்., த.வெ.க., போன்ற கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாக தலைமைக்கு புகார்கள் சென்றன.

2 தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை தலைவராக இருந்த ஆனந்தகுமார் த.வெ.க., தலைவர் நடிகர் விஜயின் பிறந்தநாளிற்கு புகழ்பாடி வலைதளங்களில் பதிவிட்டார்.

இதை தொடர்ந்து உடனடியாக அவர் கட்சி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது : மாற்று கட்சியினருக்கு ஆதரவு அளிக்கும் நபர்களால் கட்சி பலவீனமடையும். அவர்களை நீக்கி புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தலைமை தீர்மானித்துள்ளது. நிர்வாகிகளின் சமூக வலைதள பக்கங்களை கண்காணிக்கும் பணிகள் நடந்து வருகிறது. கட்சிக்கு எதிரானவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை அறிவித்துள்ளது என்றார்.

Advertisement