8 வயது சிறுமியை சீண்டிய எஸ்.ஐ.,யிடம் கிடுக்கிப்பிடி

சென்னை, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து, போலீஸ் எஸ்.ஐ., ஒருவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த, 8 வயது சிறுமி, தனியார் பள்ளி ஒன்றில், நான்காம் வகுப்பு பயில்கிறார்.

நேற்று முன்தினம் மாலை, சிறுமி மாயமான நிலையில், வீட்டருகே வசிக்கும் ஆயுதப்படை போலீஸ் எஸ்.ஐ., ஒருவரின் வீட்டில் மயங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. சிறுமியை, அவரின் பெற்றோர் வீட்டிற்கு துாக்கி வந்துள்ளனர்.

பின், உறவினர்களுடன் போலீஸ் எஸ்.ஐ., வீட்டிற்குச் சென்று, சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு, பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக குற்றம்சாட்டி வாக்குவாதம் செய்தனர். பதிலுக்கு போலீஸ் எஸ்.ஐ., குடும்பத்தினரும் சத்தமாக பேசியதால், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார், போலீஸ் எஸ்.ஐ., குடும்பத்தினரையும், சிறுமியின் பெற்றோர் மற்றும் அவர்களின் உறவினர்களையும் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.

சிறுமியின் தரப்பினரை, போலீஸ் வாகனத்தில் ஏறுமாறும் வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடனும் வாக்குவாதம் செய்தனர். போலீஸ் எஸ்.ஐ., குடும்பத்தினரை காப்பாற்ற முயற்சி செய்வதாகவும் குற்றஞ்சாட்டினர்.

போலீஸ் எஸ்.ஐ., தரப்பில், 'சிறுமியின் தந்தை, சிறுமியை தினமும் அடித்து கொடுமைப்படுத்துவார். அதை நாங்கள் வீடியோ எடுத்து, சைல்டு ஹெல்ப் லைன் எனும் குழந்தைகளுக்கான உதவி எண்களுக்கு புகார் அளிக்க இருந்தோம்.

'இதனால், சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் தொல்லை தரப்பட்டதாக எங்கள் மீது புகார் அளித்து உள்ளனர்'என, வாக்குமூலம் அளித்துள்ளனர்.

போலீசார், சிறுமி மற்றும் போலீஸ் எஸ்.ஐ., வீடு அருகே உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். சாதாரண உடையில் பெண் போலீசார், பாலியல் தொல்லை குறித்து சிறுமியிடம் தகவல்களை சேகரிக்கின்றனர்.

போலீஸ் எஸ்.ஐ.,யிடம், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் வனிதா தலைமையிலான அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மருத்துவ பரிசோதைனையில் சிறுமியின் உடலில் மயக்க ஊசி செலுத்தப்படவில்லை என, தெரியவந்துள்ளது.

Advertisement