ஹாசன் மாரடைப்பு சம்பவம்; நிபுணர் குழு அமைப்பு

பெங்களூரு; ''ஹாசனில் ஒரே மாதத்தில் 18 பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள அரசு, இதுகுறித்து ஆய்வு செய்ய, ஜெயதேவா மருத்துவ மைய இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

பெங்களூரு ஆரோக்ய சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஹாசனில் ஒரே மாதத்தில் 18 பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள அரசு, இது குறித்து ஆய்வு செய்ய, ஜெயதேவா மருத்துவ மைய இயக்குநர் தலைமையில் குழு அமைத்துள்ளது. 10 நாட்களில் அறிக்கை கிடைத்துவிடும். அறிக்கை கிடைத்த பின்னரே காரணம் தெரியும். அதுவரை எதுவும் சொல்ல இயலாது.

திடீர் மாரடைப்பை தவிர்க்கும் வகையில் 82 இடங்களில் புனித் ராஜ்குமார் இதய ஜோதி திட்டத்தை அரசு அமல்படுத்தி உள்ளது.

ஆனாலும், சமீபத்தில் இளைஞர்களிடம் மாரடைப்பு அதிகரிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.

வாழ்க்கை முறை, உணவு முறையால் மாரடைப்பு ஏற்படுகிறது என்று கூறினாலும், ஹாசனில் மட்டும் மாரடைப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பது, பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

ஹாசனில் மட்டும், நடப்பாண்டு மே 28ம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை 18 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர்.

 20 வயதுக்கு உட்பட்ட 2 ஆண், 2 பெண்கள்

 21 முதல் 29 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண்

 30 முதல் 40 வயதுக்கு உட்பட்ட 5 ஆண்கள்

 41 முதல் 59 வயதுக்கு உட்பட்ட 7 ஆண்கள்

 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு ஆண் என தெரிய வந்துள்ளது.

கொரோனாவின்போது செலுத்தப்பட்ட தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுகிறதா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்பதை ஆய்வு செய்ய ஜெயதேவா மருத்துவ மைய இயக்குநர் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement