திருமணத்திற்கு மறுத்ததால் பெண் போலீஸ் தற்கொலை; கர்ப்பமாக்கி ஏமாற்றிய போலீஸ்காரர் கைது

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அருகே போலீஸ்காரர் திருமணம் செய்ய மறுத்ததால், பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த கொங்கராயனுாரை சேர்ந்தவர் சோனியா, 26. இவரும், கீழ்கவரப்பட்டை சேர்ந்த முகிலன், 27, என்பவரும் காதலித்து 2018ல் திருமணம் செய்து கொண்டனர். ஆறு வயது மகள் உள்ளார்.

திருமணமான 2வது ஆண்டில், சோனியா போலீஸ் பணிக்கு தேர்வாகி, ஆவடி போலீஸ் ஸ்டேஷனில் பணியில் சேர்ந்தார். தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோனியா தனியாக வசித்தார்.

இந்நிலையில், ஜூலை 1ம் தேதி கொங்கராயனுாரில் பெற்றோர் வீட்டிற்கு வந்த சோனியா, பூச்சி மருந்து குடித்து, புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

இதற்கிடையே, ஜூலை 1ல் தனக்கு சோனியா அனுப்பிய, 'வாட்ஸாப்' ஆடியோவை நெல்லிக்குப்பம் போலீசில் முகிலன் கடிதமாக அளித்துள்ளார்.

அதில், ஆவடி ஸ்டேஷனில் பணிபுரியும், மரக்காணம், கரிபாளையத்தை சேர்ந்த ராஜி என்ற போலீஸ்காரருடன் பழக்கம் ஏற்பட்டது.

கணவரிடம் விவாகரத்து பெற்ற பின் திருமணம் செய்து கொள்வதாக ராஜி கூறியதால், நெருங்கி பழகியதில் கர்ப்பமானேன்.

இதை ராஜியிடம் கூறியபோது, கர்ப்பத்தை கலைக்கும்படி கூறியதற்கு மறுப்பு தெரிவித்தேன்.

அலுவலகத்திலும் கடுமையான பணிகளை கொடுத்து தொல்லை கொடுத்ததால் கர்ப்பம் கலைந்தது. என் மரணத்துக்கு ராஜி தான் காரணம். ராஜி மற்றும் பணி அழுத்தம் கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஆடியோவில் அவர் பதிவிட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக, முகிலன், அவரது உறவினர்கள் நேற்று போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

போலீசார் சமாதானம் செய்து, சோனியாவை தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிந்து ராஜியை கைது செய்தனர்.

Advertisement