ஆலந்துாரில் வேகத்தடைகளால் தொடர் விபத்து அமைத்த சில நாட்களில் உடைத்தெறிந்த மக்கள்

ஆலந்துார், ஆலந்துார் மண்டலத்தில், பிரதான சாலைகளில் பல ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வேகத்தடைகள், விபத்துகளையும், போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தியதால், மக்களே அவற்றை உடைத்தெறிந்தனர்.

சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலத்தில், விபத்துகளைத் தவிர்க்க, சாலைகளில் வேகத்தடை அமைக்கும் பணியை, நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர்.

குறிப்பாக, பள்ளிகள், சாலை சந்திப்புகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களில், ரிப்ளெக்டருடன் கூடிய 'பேப்ரிக்கேட்' வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.

ஆனால், அடுத்தடுத்து அமைக்கப்பட்ட இரண்டு வேகத்தடைகளை கடக்கும் இருசக்கர வாகனங்கள், கட்டுப்பாட்டை இழந்து வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகளை சந்தித்தனர்.

மேலும், வாகன போக்குவரத்து அதிகம் கொண்ட சாலைகளில், 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இது குறித்து தொடர் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, வேகத்தடை அமைக்கப்பட்ட சில இடங்களில், ஒரு வேகத்தடையை அப்பகுதி மக்களே உடைத்து அகற்றினர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

வேகத்தடை என்பது, வேகத்தை கட்டுப்படுத்த வேண்டுமே தவிர, விபத்துகளையும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தக் கூடாது. வாகனங்களின் போக்குவரத்திற்கு ஏற்ப வேகத்தடைகளை அமைக்காததால், பல ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அவை, சில நாட்களிலேயே உடைத்து அகற்றப்பட்டுள்ளன.

இதனால், மக்கள் வரிப் பணம் தான் வீணானது. இனியாவது, நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, சரியான முறையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement