சாலையோரம் மணல் குவியல் ஆற்பாக்கத்தில் விபத்து அபாயம்

ஆற்பாக்கம்:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஆற்பாக்கத்தில், சாலையோரம் உள்ள எம்.சாண்ட் மணல் குவியலால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை வழியாக ஆற்பாக்கம், மாகரல், வெங்கச்சேரி, திருப்புலிவனம், உத்திரமேரூர், அச்சிறுப்பாக்கம், வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.

இச்சாலையில், கட்டுமானப் பணிக்காக லாரிகளில் எடுத்துச் சென்ற எம்.சாண்ட் மணல், ஆற்பாக்கம் சாலையோரத்தில் குவியலாக உள்ளது.

இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, மணல் குவியலில் சிக்கி நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், ஆற்பாக்கம் சாலையோரம், போக்குவரத்திற்கு இடையூறாக குவிந்துள்ள எம்.சாண்ட் மணல் குவியலை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement